டெல்லியில் நைஜீரிய வாலிபரை கட்டி வைத்து கொலை வெறி தாக்குதல்.. பதற வைக்கும் வீடியோ
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக டெல்லியில் நைஜீரியர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கும் காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கின்றன.
டெல்லி : தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நைஜீரியரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து ஈவு இரக்கமற்ற முறையில் உருட்டுக் கட்டையால் அடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
தெற்கு டெல்லியின் மால்வியா நகர்ப் பகுதி ஆப்பிரிக்க மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு செப்டம்பர் 24ம் தேதி குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று திருட நைஜீரியர் ஒருவர் முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசாரிடம் ஒப்படைக்கும் போது அவர் கால்களைத் தாங்கி நடந்து வந்துள்ளார், இது குறித்து கேட்ட போது திருடியதைக் கண்டு பிடிக்க முயன்ற போது தப்பிக்க படியில் தவறி விழுந்துவிட்டதாக அந்தப் பகுதியினர் கூறியுள்ளனர்.
|
கட்டி உதைக்கப்பட்டார்
ஆனால் உண்மையில் அந்த நைஜீரியர் பிடிபடும் போது நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நபரின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்றொருவர் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்குகிறார்.
விடாமல் அடித்த டெல்லிவாலாக்கள்
உயிருக்கு பய்ந்து தன்னை விட்டுவிடுமாறு அவர் கதறுவதையும் பொருட்படுத்தாமல் அந்த நைஜீரியரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் மிளகாய்ப் பொடியை அவன் மீது தூவு, கட்டையால் நன்றாக அடி என்ற குழுமி இருந்தவர்களும் கூறும் ஆடியோவும் அதில் பதிவாகியுள்ளது.
சிறையில் அடைப்பு
பிடிபட்ட நைஜீரியர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் போது உதடு, முகம், கை, கால்களில் காயம் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நிறவெறித் தாக்குதல்
இந்நிலையில் நெஞ்சை பதற வைக்கும் வகையில் கதறும் அந்த நைஜீரியரின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தான் உண்மையான நிறவெறித் தாக்குதல் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே வெளியாகியுள்ள வீடியோவை ஆதாரமாக வைத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.