4 பேரைக் கொன்று வீடுகளைச் சேதப்படுத்திய பீகார் யானையைச் சுட்டுக் கொன்ற நீலகிரி வேட்டைக்காரர்!
உதகை: பீகாரில் 4 பேரைக் கொன்று, குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை தமிழகத்தைச் சேர்ந்த ஷபத் அலிகான் என்ற வேட்டைக்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த யானையைக் கொல்வதற்காகவே அவர் பீகார் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டைக்காரரான ஷப்த் அலி கான், துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். கடந்த மாதம் 20ம் தேதி பீகார் மாநில வனத்துறையிடமிருந்து இவருக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில், பீகாரில் ஆட்களைக் கொன்று அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்த 35 வயது மதிக்கத்தக்க காட்டுயானையானது கடந்த மாதம் 17ம் தேதி நேபாளத்திலிருந்து தப்பி, பீகாருக்குள் நுழைந்துள்ளது. ஜனவரி 20ம் தேதி ஆரார்யா மாவட்டத்தில் ஒருவரைக் கொன்ற அந்த காட்டுயானை, பின்னர் அங்கிருந்து பூர்னியா மாவட்டத்தை நோக்கிச் சென்றது. அப்பகுதியில் தான் விமானப்படை நிலையம் உள்ளது.
இந்த காட்டுயானையை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பீகார் மாநில வனத்துறையினரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலிருந்து சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களாலும் அந்த காட்டு யானையை அடக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஷபத்திற்கு பீகார் வனத்துறையினர் கடிதம் எழுதினர். தகவலறிந்து விரைந்து வந்த ஷபத் தனது குழுவினருடன் சேர்ந்து காட்டு யானையின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், இந்திய விமான தளத்தின் சுற்றுச்சுவர்களை உடைத்த காட்டுயானை, அதன் உள்ளே நுழைந்தது.
தொடர்ந்து கட்டுக்கடங்காமல் அட்டகாசம் செய்து வந்த அந்த காட்டுயானை ஜனவரி 22ம் தேதி குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளை நாசப்படுத்தியது. இதில், ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டு யானையை அடக்க ஷபத் தனது குழுவினருடன் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, ஜனவரி 23ம் தேதி லோகினி கிராமத்தில் குடியிருப்புகளை நாசப்படுத்திய அந்த யானை, மேலும் இருவரைக் கொன்றது.
இதனால் அப்பகுதி மக்களிடையே பீதி அதிகரித்தது. யானைக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அஞ்சினர்.
இந்த சூழ்நிலையில், காட்டுயானையைச் சுட்டுக் கொல்லுமாறு ஷபத்திற்கு பீகார் மாநில தலைமை வனக்காவலர் கடிதம் வாயிலாக அனுமதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்தக் காட்டுயானையை ஷபத் சுட்டுக் கொன்றார்.
வீடுகளை துவம்சம் செய்து 4 பேரைக் கொன்ற காட்டுயானையை சுட்டுக் கொன்று பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றிய ஷபத்தை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.