கலகலத்து போயுள்ள திரையுலகம்! சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா!!
டெல்லி: சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான சர்ச்சையில் மத்திய சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சென்சார் வாரியத்தின் 12 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, ஆசிரமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்க சிகிச்சை செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பட்டது.
கடவுளின் தூதர்
இந்நிலையில் அவரை கடவுளின் தூதராக சித்தரித்து Messenger of God (MSG) என்ற பெயரிலான படம் ஒன்று ஹிந்தியில் தயாரானது. இதில் அவர் நடித்துள்ளார். அது பொழுது போக்கு திரைப்படம் போல இல்லாமல், ஏதோ சாமியாரின் விளம்பர படம் போல காணப்படுகிறதாம்.
அற்புதங்கள் செய்வாராம்
கண்பார்வையற்றவர்களை பார்க்க செய்வது உள்ளிட்ட அற்புதங்களை ராம் ரஹீம் செய்வது போன்ற காட்சிகள் அப்படத்தில் இடம் பெற்றுள்ளன. சீக்கிய அமைப்புகளுக்கும், ராம் ரஹீமுக்கும் நடுவே பிரச்சினை இருந்துவருவதால், இப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு நிலவுகிறது.
லீலா சாம்சன் ராஜினாமா
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்சார் வாரியம், அப்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தது. ஆனால், படத்திற்கு மேல் முறையீட்டு ஆணையம் சான்றிதழ் வழங்கியது. இதை எதிர்த்து சென்சார் போர்டு தலைவர் பதவியை லீலா சாம்சன், நேற்று ராஜினாமா செய்தார்.
கூண்டோடு காலி
அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் சென்சார் போர்டின் 12 உறுப்பினர்களும் இன்று கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். எனவே 13 பேர் கொண்ட சென்சார் வாரியம் இப்போது காலியாகிவிட்டது.
சென்சார் வாரியத்திற்கு மதிப்பு இல்லை
சென்சார் வாரியத்திற்கு மதிப்பு அளிக்காமல் மேல்முறையீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக, சென்சார் போர்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சாமியார் தரப்பில் கூறுகையில், சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுத்ததைத் தொடர்ந்து தற்போது மேல் முறையீட்டு ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளோம் என்றனர்.
அமைச்சகம் பரிசீலனை
சென்சார் போர்டு உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் அமைச்சகம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. ராஜினாமா கடிதம் இன்னும் கைக்கு வரவில்லை என்று தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
படத்தை அனுமதிக்க கோரிக்கை
இதனிடையே இந்துக்களை அவமதிக்கும் பிகே திரைப்படத்திற்கு அனுமதித்த சென்சார் வாரியம், இந்த படத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வட இந்திய இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட தற்போதைய சென்சார் வாரிய உறுப்பினர்கள் இடையே, ஊழல் மலிந்துவிட்டதால் நடவடிக்கைக்கு பயந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. அதே நேரம் பஞ்சாப் அரசு படத்துக்கு தடை விதித்துள்ளது.