தங்கம், வைரத்தில் கூட கலப்படம்.. வாடிக்கையாளர்களை திட்டம் போட்டு ஏமாற்றிய நீரவ் மோடி!
நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நிறைய நகைகளில் கலப்படம் செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இவர் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள்.
நடிகைகள்
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நீரவ் மோடி தனக்கு போட்டியாக இருந்த எல்லா எதிரிகளையும் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார். ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் தொடங்கி எல்லோரும் இவரது நிறுவனத்திற்கு வாடிக்கையாளராக இருக்கிறார்கள். கேட் வின்ஸ்லெட் ஆஸ்கார் விழாவிற்குக் கூட இவர்கள் நகையைத்தான் அணிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
குறைவாகியது
ஆனால் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் வருமானம் இப்போது குறைந்து இருக்கிறது. இந்த மோசடி செய்திகளுக்கு பிறகு 15-20 சதவிகிதம் வரை வியாபாரம் குறைந்து இருக்கிறது. ஏற்கனவே போர்ப்ஸ் பட்டியலில் இருந்து இவர் பெயர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரிய மோசடி
இவர் தங்கம் மற்றும் வைரங்களில் நிறைய மோசடியும் செய்து இருக்கிறார். தங்கத்தில் நிறைய கலப்படம் செய்துள்ளார். அதேபோல் வைரங்களில் மிகவும் தரம் குறைவானதை அதிக விலைக்கு ஏமாற்றி விற்றுள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கில் ஏமாற்றி இருக்கலாம் என்று அகில இந்திய கற்கள் மற்றும் நகைகளின் வியாபார கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
முக்கியமான
இந்த புகார் வந்த சில நாட்களிலேயே, முக்கியமான கஷ்டமர்களை நீரவ் மோடியின் கீதஞ்சலி நிறுவனம் இழந்துவிட்டது. இந்த நிலையில் ஏற்கனவே பல நடிகைகள் இந்த நிறுவனத்திற்கு விளம்பரங்களில் போஸ் கொடுக்க மறுத்து இருக்கிறார்கள். இந்த புகார் காரணமாக இன்னும் நிறைய பேரை அந்த நிறுவனம் இழக்க வாய்ப்பு இருக்கிறது.