பல்லாயிரம் கோடி ரூபாய் ஆபரணங்களை முன்கூட்டியே பதுக்கிய நீரவ் மோடி!- 200 போலி நிறுவனங்களுக்கும் குறி
டெல்லி: பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து தப்பியோடிய வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி பதுக்கிவிட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரூ11,400 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட குஜராத் வைர வியாபாரி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து இண்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிரடி சோதனை
இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூரு, குவஹாத்தி, ஜலந்தர், மும்பை, சண்டிகர் மற்றும் லக்னோ உள்ளிட்ட 15 நகரங்களில் 45 இடங்களில் அமலாக்கப் பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவிடம் பேசிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண கற்களை நீரவ் மோடி ஏற்கனவே பதுக்கி வைத்திருக்கிறார் என்றனர்.
அமலாக்கப் பிரிவின் அதிரடி
நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதனடிப்படையில்தான் பெங்களூருவில் 10, டெல்லியில் 7, மும்பை, கொல்கத்தாவில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சென்னை, குவஹாத்தியிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆபரணங்கள் அதிரடி பறிமுதல்
கோவா, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், ஜலந்தரிலும் சோதனை நடத்தப்பட்டது. சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ரூ1.27 கோடி மதிப்பிலான ஆபரண கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ5674 கோடி ஆபரணங்கள் பறிமுதல்
ஏற்கனவே சனிக்கிழமையன்று 35 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ5,674 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீரவ் மோடியின் வங்கி மோசடிக்கு உடந்தையாக இருந்த 200 போலி நிறுவனங்கள் குறித்தும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.