மீண்டும் நிர்பயா ஏவுகணை சோதனை தோல்வி - நடுவானில் வெடித்து சிதறடிக்கப்பட்டது!
ஹைதராபாத்: இந்திய பாதுகாப்புத் துறையே மிகவும் எதிர்பார்த்த இன்றைய நிர்பயா ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. சரியான இலக்கை அது எட்டாததால் நடுவானிலேயே சிதறடிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் 2013ஆம் ஆண்டு முதன் முதலாக நிர்பயா ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதித்து பார்த்தது. ஆனால் அப்போது அது குறிப்பிட்ட இலக்கை எட்டாத நிலையில் நடுவானில் வெடித்து சிதறடிக்கப்பட்டது.
ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லக் கூடியது நிர்பயா. இந்த நிர்பயா ஏவுகணை சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணயை தொடர்ந்து விஞ்ஞானிகள் மேம்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒடிஷாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.38 மணிக்கு நிர்பயா ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. அது வெற்றிகரமாக புறப்பட்ட போதும் 700வது நொடியில் இலக்கை சரியாக எட்டாமல் திசைமாறி சென்றது.
இது கடலில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்துவிடக் கூடும் என்பதால் நடுவானிலேயே விஞ்ஞானிகள் வெடித்து சிறதடிக்கச் செய்தனர்.
இது குறித்து கூடுதல் விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.