10 பேர் சீரியல் கொலை.. 4 பேருக்கு ஒரே நாளில் தூக்கு.. 37 வருடத்திற்கு பின் நடக்கும் நிகழ்வு!
டெல்லி: நிர்பயா கொலை வழக்கில் 4 பேர் ஒரே நாளில் தூக்கில் இடப்பட்ட உள்ளனர். ஆனால் இந்தியாவில் 4 குற்றவாளிகள் ஒன்றாக தூக்கில் போடப்படுவது இது முதல்முறை கிடையாது.
டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
குற்றவாளி
இந்தியாவில் 4 குற்றவாளிகள் ஒன்றாக தூக்கில் போடப்படுவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பே இதேபோல் 4 குற்றவாளிகள் தூக்கில் இடப்பட்ட நிகழ்வு இந்தியாவில் நடந்து இருக்கிறது. 1983ல் ஜோஷி - அப்யான்கர் வழக்கில் 4 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். புனேவில் இருக்கும் ஏர்வாடா மத்திய சிறையில் நான்கு பேர் ஒரே நேரத்தில் தூக்கில் இடப்பட்டனர் .
எத்தனை பேர்
ராஜேந்திர ஜாக்கள், திலீப் சுத்தார், ஷாந்தாராம் கங்ஹோஜி, முனாவர் ஹாரூன் ஷா ஆகியோர் அக்டோபர் 25ம் தேதி 1983ல் தூக்கில் இடப்பட்டனர். ஜோஷி - அப்யான்கர் வழக்கு என்பது இந்தியாவை உலுக்கிய சீரியல் கொலை வழக்கு ஆகும். இந்த கொலையை செய்த ராஜேந்திர ஜாக்கள், திலீப் சுத்தார், ஷாந்தாராம் கங்ஹோஜி, முனாவர் ஹாரூன் ஷா , சுஹாஸ் சந்தாக் 5 பேரும் புனே கலைக்கல்லூரி மாணவர்கள். இவர்கள் புனேவில் படித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் நால்வரும் இணைந்து 10க்கும் மேற்பட்ட நபர்களை கொலை செய்துள்ளனர்.
கடத்தல் எப்படி
கடத்தல், துன்புறுத்தல், கொலை இதுதான் இவர்கள் நான்கு பேரின் ஸ்டைல். புனேவில் 2 வருடங்கள் இவர்கள் மிக மோசமான கொடூரமான கொலைகளை செய்துள்ளனர். முதல்முறையாக 1976ல்தான் இவர்கள் தங்கள் கல்லூரி நண்பரை கொலை செய்தனர். தங்கள் கல்லூரி நண்பரை கடத்தி, பணம் கேட்டு, அதன்பின் இவர்கள் கொலை செய்தனர். அப்போது தொடங்கிய கொலை 1977 இறுதி வரை நடந்தது. இவர்கள் செய்த கொலை எல்லாம் மிகவும் கொடூரமான வகையை சேர்ந்தது.
கயிறு எப்படி
கழுத்தை கயிறை வைத்து இறுக்கி கொல்வது, பாட்டிலை வைத்து தாக்கி கொல்வது, உயிரோடு மயக்க நிலையில் புதைப்பது, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்வது, உடலை எரிப்பது என்று பல கொடூரமான கொலைகளை இந்த கும்பல் செய்து இருக்கிறது. 5 பேரில் ஒருவரான சுஹாஸ் சந்தாக் இதில் கடைசியில் அப்ரூவர் ஆனார். 1977ல் இது கும்பல் இதனால் கைது செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை 1 வருடம் நடந்தது. இந்த வழக்கில் அப்ரூவர் ஆன சுஹாஸ் சந்தாக்கிற்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின் மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அந்த கொடூரமான கொலைக்கு பின், இப்போதுதான் மீண்டும், 4 பேர் ஒரே நாளில் தூக்கில் இடப்பட்ட இருக்கிறார்கள். இந்த தூக்கு தண்டனை நாடு முழுக்க அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.