நிர்பயா வழக்கு: சட்டத்திற்கு புறம்பாக இளம் குற்றவாளியை சிறையில் வைத்திருக்க முடியாது- சுப்ரீம் கோர்ட
டெல்லி: சட்டத்தில் இடமில்லாமல், குற்றவாளிக்கு தண்டனையை கொடுக்க முடியாது என்று நிர்பயா வழக்கில், விடுதலை செய்யப்பட்ட சிறுவனின் தண்டனையை நீட்டிக்க கோரிய மனு மீது சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொடுஞ்செயல்கள் செய்யும், 6 வயதான சிறுவர்களையும், குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்று தற்போதைய மோடி அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம் ராஜ்யசபாவில் நிலுவையில் இருப்பதுதான், அந்த சிறுவனுக்கு தண்டனை நீட்டிப்பு செய்ய முடியாததன் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற ஐவரில் ஒருவருக்கு அப்போது 17 வயதே ஆகி இருந்ததால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அந்த இளம் குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்ததை அடுத்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
சிறுவனின் தண்டனை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று, டெல்லி பெண்கள் கமிஷன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம், இன்று அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சிறுவனின் (தற்போதைய வயது 20) தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லையே என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டத்தில் இடமில்லாத நிலையில், ஒருவரின் உரிமையை கோர்ட் பறித்துக்கொள்ள முடியாது என்று கோர்ட் அழுத்தம் திருத்தமாக கூறி, பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
நிர்பயா சம்பவத்தை தொர்ந்து, 6 மாதங்கள் முன்பு, சிறுவர்கள் நீதி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. இதன்படி கொடும் குற்றங்கள் செய்திருந்தால், 16 வயதாகியிருந்தாலும்கூட, அந்த குற்றவாளி சிறார் என கருதப்படமாட்டார். பிற குற்றவாளியை போலவே கருதப்பட வேண்டும். இந்த சட்ட திருத்தம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் ஒத்துழைப்பு இன்மையால் 6 மாதங்களாக இச்சட்டம், கிடப்பில் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.