திகார் சிறையில் பெரும் பரபரப்பு... நிர்பயா வழக்கு குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி!
டெல்லி: ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 6 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா டெல்லி சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்தக் கொடூர சம்பவத்தால் மருத்துவ மாணவி நிர்பயா இறந்தே போனார். இந்த வழக்கில் தண்டனை பெற்று திகார் சிறையில் உள்ளார் வினய் சர்மா.
இவர் திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்ய கொள்ள முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்த உடன், விரைந்து வந்து வினய் சர்மாவை மீட்டனர் போலீசார். தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் வினய் சர்மா அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தூக்கிட்டு கொள்வதற்கு முன்னதாக வினய் சர்மா தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை போலவே இவரது கூட்டாளியான ராம்சிங்கும் 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.