நிர்பயா குற்றவாளிகளின் கடைசி முயற்சியும் தோல்வி.. பவனின் கருணை மனு நிராகரிப்பு.. நாளை தூக்கு?
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உடனடியாக நிராகரித்தார். இதேபோல் அக்சய் குமார் சிங்கின் இரண்டாவது கருணை மனுவை நிராகரித்துள்ளார்
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து பவன் குப்தா தனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பான கருணை மனு வாய்ப்பை கையில் எடுத்தார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். இதேபோல் முன்னதாக அக்சய் குமார் சிங்கும் கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த இரு மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக நிராகரித்தார்.
இதனால் நாளை முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) நாளை காலை 6 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னதாக டெல்லி நீதிமன்றம் கருணை மனுவை காரணம் காட்டி நாளை மரண தண்டனை நிறைவேற்ற தடை விதிக்க முடியாது என டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.