தனக்கு தானே சுவற்றில் வேகமாக மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி வினய்.. திகார் சிறையில் பரபரப்பு
டெல்லி: 2012 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யபட்ட வழக்கின் மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, இந்த வார தொடக்கத்தில் தனது செல்லில் இருந்த சுவற்றில் தனக்கு தானே வேகமாக மோதி காயமாக்கி கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2012 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ், பவன், அக்சய் மற்றும் வினய் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் 4பேரும் மாறி மாறி கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக கடந்த மாதம் ஜனவரி 7, 17, 31 என மூன்று முறை குற்றவாளிகள் தூக்கு நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலயில் குற்றாவளிகள் 4 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதன் காரணமாக அடுத்த 15 நாளில் குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் எந்தபிரச்சனையும் இல்லை என்கிற நிலை உருவானது.
மரண தண்டனை
இதையடுத்து நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், அக்சய் மற்றும் வினய் ஆகிய 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்றலாம் என டத் வாரண்டை டெல்லி கூடுதல் நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ரானா பிறப்பித்தார்.
கருணை மனு
முன்னதாக குற்றவாளிகள் தங்களுக்கான சட்ட நிவாரணங்களுக்கான முயற்சிகளை ஒரு வாரத்திற்குள் செய்திட வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது. அவர்களும் கருணை மனு, கோர்ட்டில் மனு எல்லாம் போட்டார்கள். ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 3 ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரும் தூக்கிலப்படுவது உறுதியானது.
வினய் காயம்
இதனால் விரக்தி அடைந்த குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, கடந்த பிப்ரவரி 16ம் தேதி தன்னுடைய செல்லுக்குள் இருந்த சுவற்றில் தனக்குத்தானே வேகமாக மோதி காயமாக்கி கொண்டதாக சிறை அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும், சிறு காயமே ஏற்பட்டதாகவும் வினய்யை சிறை அதிகாரி தடுத்து நிறுத்தி சிகிச்சை அளித்தாகவும் தெரியவந்துள்ளது.
மன நோய்
முன்னதாக குற்றவாளி வினய் சர்மா திஹார் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக வினாயின் வழக்கறிஞர் இந்த வார தொடக்கத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். சிறைச்சாலையில் வினய் தாக்கப்பட்டதாகவும், தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார், அதே நேரத்தில் வினய் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் அப்போது கூறினார். நீதிமன்றம் திஹார் சிறை கண்காணிப்பாளருக்கு இது குறித்து உரிய அக்கரை செலுத்துமாறு அப்போது உத்தரவிட்டது.