நிர்பயாவை பலாத்காரம் செய்தவன் பேட்டி- கொந்தளித்த சானியா மிர்சா
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவர் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியின்றி பேட்டி அளித்திருப்பதை பார்த்தால் தனக்கு கோபம் வருவதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதில் பலியானார். இது குறித்து எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் வரும் 8ம் தேதி பிபிசியில் ஒளிப்பரப்பாக உள்ளது.
இந்த ஆவணப்படத்திற்காக மாணவியை பலாத்காரம் செய்தவர்களில் ஒருவரான முகேஷ் சிங் பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளார். மாணவி அமைதியாக பலாத்காரம் செய்ய அனுமதித்திருந்தால் அவரை தாக்கியிருக்க மாட்டோம் என்று அந்த கொடூரன் தெரிவித்துள்ளான். இது குறித்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
கோபம்
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அளித்த பேட்டியை பார்த்து எனக்கு கோபம் கோபமாக வருகிறது.
மூளையில் பாதிப்பு
ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி பேட்டி அளித்துள்ள அவருக்கு மூளையில் ஏதோ பாதிப்பு இருக்க வேண்டும். நல்லபடியாக உள்ள யாரும் இப்படி செய்யவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.
உயிருடன்
ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நினைக்கையில் கோபம் வருகிறது என்றார் சானியா.
சானியா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ண தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.