இப்பதான் நிம்மதி.. நீதிவென்றுள்ளது.. நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு உறுதி:அப்பா, அம்மா மகிழ்ச்சி
நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், நிர்பயாவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜோதிசிங் (நிர்பயா) என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங் கொடூரமாக தாக்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பரில் நிர்பயா உயிரிழந்தார்.
கைது
நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
இளங்குற்றவாளி
இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என்றாலும், இளம் குற்றவாளியின் விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது.
மரண தண்டனை
மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீடு
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிகளான 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
பெற்றோர் மகிழ்ச்சி
இந்தத் தீர்ப்பை கேட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீதி வென்றுள்ளது என்றும் கூறினார். மேலும், இந்த தீர்ப்பு நாட்டுக்கு வலிமையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். நிர்பயா தந்தை பத்ரி சிங், எனது குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.