நிர்பயா வழக்கு.. இது அரிதிலும் அரிதானது.. கருணைக்கே இடமில்லை.. சுப்ரீம் கோர்ட்
நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து நிர்பயா என்ற இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கு அரிதிலும் அரிதானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும், இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முறையையும் கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.
குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது" என்று உத்தரவிட்டனர்.