'இந்தியாவின் மகள்' படம் உண்மைக்கு புறம்பானது: நிர்பயாவுடன் பஸ்சில் இருந்த ஆண் நண்பர் பரபரப்பு தகவல்!
டெல்லி: இந்தியாவின் மகள் ஆவணப்படம் போலியானது என்று சம்பவத்தன்று நிர்பயாவுடன் பேருந்தில் சென்ற அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சம்பவம் நடந்தபோது நிர்பயாவுடன் இருந்த அவரது நண்பர் அவனிந்திரா பாண்டே அந்த 6 பேரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் நிர்பயா சம்பவம் பற்றி லெஸ்லீ உட்வின் என்பவர் இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். ஆவணப்படத்தில் நிர்பயாவை சீரழித்தவர்களின் பேட்டி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆவணப்படம் குறித்து அவனிந்திரா கூறுகையில்,
படம் போலியானது. அதை நிர்பயாவின் கோணத்தில் காண்பிக்கவில்லை. உண்மையை மறைத்து பொய்யாக படத்தை எடுத்துள்ளார்கள். அன்று இரவு என்ன நடந்தது என்று எனக்கும் நிர்பயாவுக்கும் மட்டும் தான் தெரியும். ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானது. உணர்ச்சிகளை கேலிக்கூத்தாக்கி நம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்கும்படி உள்ளது அந்த ஆவணப்படம்.
நம் நாட்டின் இமேஜை ஆவணப்படம் கெடுத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் நம் நாட்டு சிறைக்குள் நுழைந்து எந்த குற்றவாளியையும் பேட்டி காணலாம் என்பதை ஆவணப்படம் தெரிவிக்கிறது. ஆவணப்படத்தில் நடிக்குமாறு என்னை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஆவணப்படங்களுக்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.