பாதுகாப்புத் துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்!
புதிதாக கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவருக்கு ஜேட்லி வசம் கூடுதலாக இருந்த பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வரானதை தொடர்ந்து அவர் வசம் இருந்த அத்துறை நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது.
அதில் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் 9 பேர் புதியவர்களும் பதவியேற்று கொண்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. பியூஷ் கோயலுக்கு ரயில்வே துறையும், சுரேஷ் பிரபுவுக்கு தொழில்- வர்த்தகத் துறையும், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கூடுதலாக திறன்மேம்பாட்டு துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்று கொண்டவர்களில் 2-ஆவது பெண் என்ற பெருமையை பெறுகிறார் நிர்மலா சீதாராமன். அருண்ஜேட்லி நிதித்துறை அமைச்சராக நீடிப்பார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் துறைகளில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.