ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் அனுப்பினீர்களா? நிருபர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் இது
Recommended Video
பெங்களூர்: ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் உடல்நல பிரச்சினை தொடர்பாக ராணுவ விமானத்தை அனுப்பி வைத்ததாக வெளியான தகவல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பி பாலமுருகன் உடல் நலம் குன்றி இருந்த போது மதுரையிலிருந்து சென்னைக்கு ராணுவ ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு அழைத்து சென்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தகவலை டெல்லியில் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவிக்க, இதன் பிறகு அவரை சந்திக்கும் அப்பாயின்மென்ட்டை நிர்மலா சீதாராமன் ரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கேள்வி பதில்
இந்த நிலையில் பெங்களூரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த போதிலும் பன்னீர்செல்வம் விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.
தமிழில் கேள்வி
தமிழ் தொலைக்காட்சி ஒன்று நிருபர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது, பரவாயில்லை நீங்கள் தமிழிலேயே கேளுங்கள் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு நீங்கள் ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியுள்ளதற்காக, உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே, இதற்குறித்து உங்கள் பதில் என்ன என்று நிருபர் கேட்டதை, முழுமையாக உள்வாங்கிக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.
கேட்டாச்சில்ல, போதும்
எனவே அவர் பதில் அளிக்க கூடும் என அனைத்து ஊடகவியலாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நிருபர் கேள்வியை முடித்ததும், பதிலுக்கு சிரித்தபடியே, "தேங்க்யூ" என்று தெரிவித்து விட்டு, வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு அடுத்த கேள்விக்கு தயாராகிவிட்டார் நிர்மலா சீதாராமன்.
நீடிக்கும் சர்ச்சை
நிர்மலா சீதாராமனின் இந்த ரியாக்ஷனால், இந்த சர்ச்சை குறித்த அவர் தரப்பு பதிலை இதுவரை ஊடகங்களால் பெற முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து இப்போது தமிழக அரசு சார்பிலும் யாரும் பதில் பேசுவதில்லை.