சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீதா அம்பானி தேர்வு
டெல்லி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் என்ற பெறுமை நீதா அம்பானிக்கு கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 129வது ஐஓசி கூட்டம் கடந்த இரு தினங்களாக பிரேசிலில் நடந்தது. இந்த கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனிநபர் உறுப்பினராக நீதா அம்பானி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நீதா அமாபானி (52), 70 வயது வரை இந்த பதவியில் நீடிக்க முடியும். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் வேட்பாளர் இவர்தான்.
கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர்.