பாஜக - நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்
பாஜக - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டுச்சதிக்கு லாலு பிரசாத் பழிவாங்கப்பட்டு உள்ளார் என்று அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்னா : பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் கூட்டுச் சதிக்கு தனது தந்தை லாலுபிரசாத் யாதவ் பழிவாங்கப்பட்டு இருக்கிறார் என்று அவரது மகனும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ்விற்கு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 4-வது ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை லாலுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
லாலுவின் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய தேஜஸ்வி யாதவ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பாஜக மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கூட்டுச்சதியால் லாலுபிரசாத் பழிவாங்கப்பட்டுள்ளார்; சிறையில் லாலுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் லாலுவின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. அப்படி இருப்பதாக கருதினால், அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பாஜக அதை எந்த விதத்திலும் தடுக்காது என்று துணை முதல்வர் சுசில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக ராஞ்சி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத் யாதவை பாஜகவின் மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹாவும், காங்கிரஸ் தலைவர் சுபோத்கான் சகாயும் நேரில் சந்தித்துப் பேசினர்.