பாலியல் புகார்: ராம்நகர் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு
பெங்களூர்: ஆரத்திராவ் என்ற முன்னாள் பெண் சிஷ்யை, நித்தியானந்தா சாமியாராகுக்கு எதிராக அளி்த்த பாலியல் புகாரின் பேரில் கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நித்தியானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை, குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதனிடையே வழக்கு கடந்த 15ம்தேதி, ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோர்ட்டில் நித்தியானந்தா ஆஜராக வேண்டியது கட்டாயம். அதன்படி நித்தியானந்தா மற்றும் அவரது ஐந்து சீடர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஆனால் விசாரணையை 27ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதையடுத்து சாமியார் தனது சிஷ்யர்களுடன் பிடதி ஆசிரமத்துக்கு திரும்பினார். இதையடுத்து இன்று மீண்டும் நித்தியானந்தாவும், சீடர்களும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது பாலியல் புகாரில் தனது ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 26ம்தேதிக்கு ஒத்தி வைத்து, அதுவரை நித்தியானந்தா மற்றும் சீடர்களுக்கு ஜாமீன் நீட்டிப்பு அளித்தார்.