நித்தியானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை- சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு
பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை நேற்றிரவு சி.ஐ.டி. போலீசாரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
கடந்த 2010ம் ஆண்டு சிஷ்யை ஆர்த்தி ராவ் தொடுத்த வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சேர்ந்து இந்தச் சோதனையை சுமார் ஐந்தரை மணி நேரத்தில் நடத்தி முடித்தனர்.
இதற்கிடையே நித்தியானந்தாவிற்கு நடத்தப்பட்ட ஆண்மைப் பரிசோதனைக் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாயின. உண்மையில் நித்தியானந்தாவிற்கு ஆண்மைப் பரிசோதனையே நடத்தப் படவில்லை என்று கூட செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், நித்தியானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை நேற்றிரவு மருத்துவர் துர்கன்னா சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த துர்கன்னா அறிக்கையைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மேலும் அறிக்கை தயாரித்த டாக்டர்கள் பற்றி வெளியான தவறான தகவல்கள் உண்மை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த துர்கன்னா, தற்போது எடுக்கப்பட்ட பரிசோதனைகளே போதுமானது என்றும், மேலும் நீதிமன்றம் மற்றும் போலீஸ் கேட்டுக் கொண்டால் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்யப்படும் என்றார்..
ஆனால், தற்போது செய்யப்பட்டுள்ள இந்த பரிசோதனைகள் மட்டும் வழக்கு விசாரணைக்குப் போதுமானதாக இருக்காது. இவை முதற்கட்ட சோதனைகள் மட்டுமே எனவே, மேற்கொண்டு சில சோதனைகள் செய்ய வேண்டி இருக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.