ஆண்மை சோதனையால் அதிர்ச்சி! பிடதியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஷிப்ட் ஆகிறார் நித்தியானந்தா!!
பெங்களூர்: நித்தியானந்தா தனது ஆசிரமத்தை பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளார். ஆண்மை சோதனை நடத்துவதாக கூறி கர்நாடக சிஐடி போலீசாரால் அடைந்த அவமானத்தால் நித்தியானந்தா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களும் இதில் உள்ளதாக தெரிகிறது.
பெங்களூர் அடுத்த ஆசிரமம்
பெங்களூர்-மைசூர் சாலையில் உள்ள பிடதி நகருக்கு வெளியே, மதிப்பு மிக்க இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைந்துள்ளது. இது மொத்தம் 22 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கட்டிடங்கள் சில ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ள நிலையில், பிற பகுதி மைதானம் போல பரந்து விரிந்து காணப்படும்.
தலைமை ஆசிரமம்
நித்தியானந்தா சாமியாருக்கு பல இடங்களில் ஆசிரமம் இருந்தாலும், பிடதி ஆசிரமத்தையே அவர் தலைமை ஆசிரமமாக அறிவித்துள்ளார். குருபூர்ணிமா உட்பட பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் பிடதி ஆசிரமத்தில்தான் நிகழ்த்தப்படும்.
நித்தியானந்தாவுக்கு சிரமங்கள்
இந்நிலையில்தான் பாலியல் மோசடி புகார்களால் சிக்குண்டு பெரும் சிரமங்களுக்கு நித்தியானந்தா ஆளானார். சற்று காலம் அவரது வாழ்க்கையில் புயல் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது ஆண்மை சோதனை என்ற பெயரில் மீண்டும் சூறாவளி சுழன்று அடிக்க தொடங்கியுள்ளது.
ஆண்மை சோதனை
நித்தியானந்தா மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் கர்நாடக சிஐடி போலீசார், நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கோர்ட் அனுமதியை பெற்று, நேற்று நாள் முழுவதும் பரிசோதனையும் நடந்து முடிந்தது. சாமியாரான தன்னிடம் ஆண்மை சோதனை நடத்தியது மன வருத்தத்தை தந்துள்ளதாக நெருக்கமான சிஷ்யர்களிடம் நித்தியானந்தா கூறிவருகிறாராம்.
திருவண்ணாமலைக்கு பயணம்
இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் இன்று காலை சிஷ்யர்கள் மத்தியில் உரையாற்றிய (பிரவச்சனா) சுவாமி நித்தியானந்தா, திருவண்ணாமலையிலுள்ள ஆசிரமத்திற்கு இடம் பெயரப்போவதாக அறிவித்தார். இனிமேல் திருவண்ணாமலையில் இருந்தபடியே 'பிரவச்சனா' செய்ய போவதாகவும் அவர் கூறினார். அதே நேரம் பிடதி ஆசிரமத்தில் உள்ள சிஷ்யர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இதை நேரடியாக காண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கன்னட அமைப்புகள் கொண்டாட்டம்
பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடகாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தன. நித்தியானந்தாவின் அறிவிப்பை கன்னட அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்தாலும், பிடதி ஆசிரமத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிகிறது.