பிரதமர் மோடியின் நிதிஆயோக் கூட்டம்:ஜெ., நவீன்பட்நாயக், மமதா உட்பட 12 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் 9 மாநில முதல்வர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் உட்பட 12 பேர் புறக்கணித்துள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த முடிவை காங்கிரஸ் கட்சி இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இவர்கள் தவிர தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.