ஆம் ஆத்மி கட்சி, காங். இடையே டீல் பேசி முடித்ததே ஒரு தொழில் அதிபர் தான்: நிதின் கட்காரி
டெல்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் பாஜக சார்பில் அபிநந்தன் சமோரா என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தலைவர் நிதின் கத்காரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து பெரிய தொழில் அதிபர் ஒருவர் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் தலைவர்கள் என்ன பேசினார்கள், சாப்பிட்டார்கள் என்ற அனைத்து விவரங்களையும் ஒருவர் என்னிடம் தெரிவித்துவிட்டார். டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள் என்று அந்த மத்தியஸ்தர் என்னிடம் கூறினார்.
டெல்லியில் உள்ள அரசு ஆம் ஆத்மி கட்சியுடையது அல்ல. அது காங்கிரஸ் கட்சியுடையது. ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் நாணயத்தின் ஒரே பக்கத்தில் உள்ளன. அவர்களின் கூட்டணியை எதிர்த்து பாஜக போராட வேண்டும். போராடி டெல்லியில் உள்ள 7 லோக்சபா சீட்களையும் கைப்பற்றுவோம். எந்த கட்சியின் ஆதரவையும் எதிர்பார்க்க மாட்டோம் என்று தனது மகன் மீது சத்தியம் செய்தவர் தான் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் முதல்வர் ஆகியுள்ளார்.
கெஜ்ரிவால் பதவியேற்றபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது தான் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு உதாரணம் என்றார்.