ஆட்சி கவிழும் அபாயம்... பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் ராஜினாமா!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் நிதிஷ்குமார் மீதான அதிருப்தியினால் 50க்கும் ஏற்பட்ட எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தினாலே நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான 17 ஆண்டுகால கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனால் மாநில சட்டசபையில் பெரும்பான்மை பலத்தையும் ஐக்கிய ஜனதா தளம் இழந்தது.
பீகார் சட்டசபை நிலவரம் என்ன?
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மொத்தம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 122. இந்த பெரும்பான்மையை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 6 சுயேட்சைகள் ஆதரவில்தான் ஐக்கிய ஜனதா தளம் பெற்று வந்தது.
லோக்சபா தேர்தலில் படுதோல்வி
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 22 இடங்களை பாரதிய ஜனதா, 6 இடங்களை அதன் கூட்டணிக் கட்சியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கைப்பற்றியது.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் ஐக்கிய ஜனதா தளமோ 2 இடங்களைத்தான் கைப்பற்றியது.
ஆட்சி கவிழும் அபாயம்
இதனால் நிதிஷ்குமார் மீது அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அத்துடன் நிதிஷ்குமார் மீது அதிருப்தியில் இருந்த 50 எம்.எல்.ஏ.க்கள், பாரதிய ஜனதாவுக்கு தாவ முடிவு செய்திருந்தனர். இதனால் எந்த நேரத்திலும் நிதிஷ்குமார் அரசு கவிழும் அபாயம் உருவானது.
இந்த நிலையில் திடீரென மாநில ஆளுநர் டயன்டியோ யஷ்வந்த்ராவை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் நிதிஷ்குமார்.
தோல்விக்கு பொறுப்பேற்ற்று ராஜினாமா
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை வென்றது.
தேர்தல் தோல்விக்காக பொறுப்பேற்று மட்டுமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். எங்களால் இப்பொழுதும் கூட அரசை நடத்த முடியும்.
மாநில சட்டசபையைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நான் பரிந்துரைக்கவில்லை. பீகாரில் வேறு ஒரு கூட்டணி அரசு அமைந்தால் எங்களுக்குப் பிரச்சனையில்லை. அதனை வரவேற்போம் என்றார்.
புதிய அரசு அமையுமா?
பீகார் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 91 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அக்கட்சியால் நிச்சயம் பீகாரில் ஆட்சியை நடத்த முடியும்.
ஆனால் தற்போதைய மோடி அலையைப் பயன்படுத்திக் கொண்டு மாநில சட்டசபை தேர்தலையும் பாஜக எதிர்கொள்ளுமா? அல்லது புதிய அரசை அமைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
அனேகமாக மாநில சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலையே பாஜக சந்திக்கும் என்றே கூறப்படுகிறது. ஏற்கெனவே முடங்கியுள்ள டெல்லி சட்டசபையையும் கலைத்துவிட்டு இரு மாநிலங்களிலும் பாஜக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.