அகந்தை கொண்டவர் நிதிஷ்குமார்: சத்தீஸ்கரில் மோடி தாக்கு
ஜக்தல்பூர்: பீகார் மாநில முதல்வர் நிதீஸ்குமார் அகந்தை கொண்ட முதல்வர் என்று நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் தனது அரசியல் எதிரியான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாகச் சாடினார்.
பழங்குடியின மக்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், சத்தீஸ்கர் மலைவாழ் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் பெறவில்லை. பாஜகவினால் மட்டுமே இந்த மாநில மக்களை முன்னேற்ற முடியும்.
ராமன்சிங் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி இல்லை.
பாட்னாவில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை டாக்டர் ராமன்சிங் (சத்தீஷ்கர் முதல்வர்) சந்தித்தார். அரசின் குறைபாடுகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. குண்டுவெடிப்பு பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் கேட்டபோது அவரது அகந்தை வெளிப்பட்டது.
இதன்மூலம் பரிதாபம் காட்டும் முதல்வர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும், அகந்தையுள்ள முதல்வர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது இவ்வாறு மோடி பேசினார்.