சாத்வியை உடனே நீக்குங்கள்.. இல்லையென்றால்.. நிதிஷ் குமார் கலகம்.. பாஜகவில் கூட்டணியில் குழப்பம்!
பாஜக கட்சியில் இருந்து சாத்வி பிரக்யா தாக்குரை உடனே நீக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாட்னா: பாஜக கட்சியில் இருந்து சாத்வி பிரக்யா தாக்குரை உடனே நீக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்திமான். அவர் முன்பு மட்டும் தேச பக்தியோடு இருக்கவில்லை. அவர் எப்போதும் தேச பக்தியோடு இருந்தவர், என்றார்.
கடும் கண்டனம்
இதற்கு பாஜக தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மோடியும், சாத்வி மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டார். அவரை என் மனம் மன்னிக்காது என்று குறிப்பிட்டு இருந்தார். பாஜக கட்சி இவர் மீதான புகாரை விசாரித்து வருகிறது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் பாஜக கட்சியில் இருந்து சாத்வி பிரக்யா தாக்குரை உடனே நீக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். சாத்வி கூறியதை மன்னிக்கவே முடியாது. காந்தி மீதான அவரின் கருத்தை எந்நாளும் ஏற்க முடியாது. உடனே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
ஏற்கனவே பிணக்கம்
ஏற்கனவே பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில் மனஸ்தாபம் இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள். பீகாரில் பாஜக பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய முக்கிய கட்சி தலைவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார்கள்.
சில பிரச்சனை
இந்த நிலையில் சாத்வி பிரக்யாவால் இந்த கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், மோடிக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. ஏற்கனவே மோடியின் பேரணியில் நிதிஷ் குமார் எழுந்து நிற்காமல் உர்ரென்று உட்கார்ந்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நிதிஷ் குமாரின் கண்டனம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆசை உள்ளது
ஏற்கனவே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் பிரதமர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை வரவில்லை என்றால், நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்தே அவர் இப்போது பாஜகவை மிரட்டிப் பார்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.