பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - பெரும்பான்மையை நிரூபித்தார்
பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
பாட்னா: பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது. தனது பெரும்பான்மையை நிதிஷ்குமார் நிரூபித்துள்ளதால் ஆட்சி தப்பியது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகாகூட்டணி ஆட்சியமைத்து இருந்தது.
முதல்வராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.
மகா கூட்டணியில் விரிசல்
இந்த ஆட்சி சுமார் இரண்டரை ஆண்டுகளை கடந்த நிலையில் மகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஹோட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
தேஜஸ்வி யாதவ்
இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை புதன்கிழமை மாலை திடீரென ராஜினாமா செய்தார்.
அதிரடி திருப்பம்
பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் நள்ளிரவில் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
அதன்படி வியாழக்கிழமையன்று காலை பீகார் முதல்வராக 6வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச்சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர். புதிதாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரினார்.
வாக்கெடுப்பில் வெற்றி
நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 108 வாக்குகளும் கிடைத்தன. அவரது கட்சி எம்எல்ஏக்கள், பாஜக, கூட்டணி எம்எல்ஏக்கள் வாக்களித்ததை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பீகார் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி தப்பியது.
உறுப்பினர்களின் எண்ணிக்கை
243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள்; காங்கிரஸுக்கு 27 என மொத்தம் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நிதிஷ்குமாருக்கு ஜனதா தளக் கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 58 என 129 எம்.எல்.ஏக்க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.