பீகார் அரசியல் புயல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் 'தப்பினார்' நிதிஷ்குமார்!
பீகாரில் நிதிஷ்குமார் அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தப்பியது.
பாட்னா: பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு தப்பியுள்ளது. நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 131 எம்.எல்.ஏக்களும் எதிராக 108 பேரும் வாக்களித்தனர்.
பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான உறவை முறித்துக் கொண்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி உள்ளார் நிதிஷ்குமார். பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராகி உள்ளார்.
சட்டசபையில் இன்று நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. முன்னதாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பரஸ்பரம் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என கூறப்பட்டது.
எம்.எல்.ஏக்கள் நிலவரம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 131, எதிராக 108 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பீகார் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. இதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள்- காங்கிரஸுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பாஜக அணியில் 129 எம்.எல்.ஏக்கள்
ஐக்கிய ஜனதா தளம்- 71; பாஜக கூட்டணி - 58 என மொத்தம் 129 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அல்லாமல் சுயேட்சைகள் - 4; சிபிஐ(எம்.எல்.) - 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 122
பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 122. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 131 எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏக்களில் 3 பேர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடும். ஏனெனில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் ஏற்கனவே நிதிஷ்குமாரை ஆதரிக்க முடியாது என கூறியிருந்தார்.
108 பேர் எதிர்ப்பு
அதேநேரத்தில் நிதிஷ்குமாருக்கு எதிராக 107 எம்.எல்.ஏக்கள்தான் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் 108 பேர் வாக்களித்துள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி எம்.எல்.ஏ., நிதிஷ்குமாருக்கு எதிராக வாக்களித்திருக்க வாய்ப்புள்ளது.