சொத்து பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்.. அப்பாவை விட மகன் 4 மடங்கு கோடீஸ்வரர் !
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரத்தை வெளியிட்டனர்.
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவரை விட அவரது மகன் நிஷாந்த் பணக்காரராக இருப்பது தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். நிதிஷ் குமார் மற்றும் அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
நிதிஷ் குமாரின் சொத்துப் பட்டியலில், ரூ.16.49 லட்சம் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஒரு வீடு, ரொக்கக் கையிருப்பு, வங்கி இருப்பு, ஃபோர்ட் கார், மாடுகள், ஆடுகள் என ரூ.56.49 லட்சம் அளவுக்கு சொத்துகள் உள்ளதாகவும், மேலும் ரூ.3.79 லட்சம் வாகன கடன் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திள்ளார்.
ஆனால், அவரது மகன் நிஷாந்துக்கு தந்தையை காட்டிலும் 4 மடங்கு சொத்து அதாவது ரூ.2.36 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பீகார் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு ஒரு வாகனம் கூட இல்லை.
இருப்பினும் ஏராளமான நிலங்கள் வைத்துள்ளதாக அவரது சொத்துப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிற அமைச்சர்களும் தங்களும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.