இப்தார் விருந்தால் பாஜக கூட்டணிக்குள் உரசல்? மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை விளாசிய நிதிஷ் குமார்
பாட்னா: இப்படிப்பட்டவர்களுக்கு மதமே கிடையாது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை தாக்கிப் பேசியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
பெகுசரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிராஜ் சிங். மத்திய அமைச்சர் பதவியிலும் உள்ளார். இந்த நிலையிில், நிதிஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பீகாரில், ரம்ஜான் இப்தார் விருந்தில் கலந்து கொண்டதை கிரிராஜ் சிங் விமர்சனம் செய்திருந்தார்.
பாஜகவின் மூத்த மூத்த தலைவரும், பீகார் துணை முதல்வருமான, சுஷில் மோடியும் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இருப்பினும் கிரிராஜ் சிங் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விமர்சனம் செய்திருந்தார்.
கிரிராஜ் சிங் வெளியிட்ட ட்வீட்டில், நமது மதத்தை ஏன் விட்டுத் தருகிறோம். பிற மதத்தினரின் கொள்கைகளையும், வழிபாட்டையும் ஏன், பெரிதுபடுத்தி, வெளிக்காட்டுகிறோம். நவராத்திரிக்கு ஏன் இப்படி இணைவதில்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாட்னாவில், ரம்ஜான் தொழுகைக்கு பிறகு முஸ்லீம்களுடனான சந்திப்பை நிகழ்த்தினார், நிதிஷ் குமார். பிறகு அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,கிரிராஜ் சிங், நான் எந்த பதிலும் உங்களுக்கு சொல்ல மாட்டேன்.
ஊடகங்கள் அவர்களை ஃபோகஸ் செய்ய வேணடும் என்பதற்காக சில விஷயங்களை தேவையின்றி செய்வார்கள். அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது. ஒவ்வொரு மதமும் மரியாதை, ஒருவருக்கொருவர் அன்பு காட்ட கற்றுக் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கிரிராஜ் சிங்கிடம், இதுபோல சர்ச்சை கருத்துக்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிதிஷ்குமார் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி பற்றி பாஜகவை சேர்ந்தவரான அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.