மோடி மீது சோனியா, லாலு, நிதீஷ் சரமாரி தாக்கு.. பாட்னா கூட்டத்தில் காட்டமான பேச்சு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி பிரசாரத்தைத் தொடங்கினார். தங்களது பேச்சின்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தனர்.
பாட்னாவின் புகழ் பெற்ற காந்தி மைதான் மைதானத்தில் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாட்னா நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பீகாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு நிதீஷும், லாலுவும் கூட்டு சேர்ந்தனர். அதன் பின்னர் இருவரும் கலந்து கொண்ட முதல் பெரிய கூட்டம் இதுவாகும்.
இந்தக் கூட்டத்திற்கு சுயமரியாதைக் கூட்டம் என நிதீஷ் குமார் பெயரிட்டுள்ளார். பாஜகவை எதிர்க்கவே பீகார் முதல்வர் நிதீஷுடன் கை கோர்த்துள்ளார் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் ஆகியோர் பேசியபோது, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தனர். மதவாரி சென்சஸ் குறித்து லாலு பிரசாத் சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
இருப்பினும் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்கனவே 3 முறை கலந்து கொண்டு பேசி விட்டார் பிரதமர் நரேந்திர மோடி என்பது நினைவிருக்கலாம்.
முதல்வர் நிதீஷ் குமார் கடந்த வாரம் தனது சொந்த மாவட்டமான நாலந்தா உள்பட 6 மாவட்டங்களில் புயல் வேகப் பிரசாரம் செய்தார். பல அடிக்கல் நாட்டு விழாக்களிலும் கலந்து கொண்டார். பல திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
பீகார் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலு கட்சியும், நிதீஷ் குமார் கட்சியும் தலா 100 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள 3 தொகுதிகள் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.