பாஜக கூட்டணிக்கு திரும்பும் திட்டமில்லை: மூன்றாவது அணி உருவாகும் - நிதிஷ் குமார்
பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பும் எண்ணமில்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரசை எதிர்கொள்ள கருத்து ஒற்றுமை, நல்லிணக்கம் அடிப்படையில் ஒரு அணி உருவாகும் என நிதிஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் 14 மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக, மூன்றாவது அணி ஒன்றை அமைந்தால் அதில் இணைய பல மாநில கட்சிகள் விருப்பம் கொண்டுள்ளன. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளை யார் மேற்கொள்வது என்பதில் தயக்கம் நிலவி வந்த நிலையில், தற்போது பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளக்கடசித் தலைவருமான நிதிஷ் குமார் அதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
இதற்காக அவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா ஆகியோருடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே மூன்றாவது அணிக்கான முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதை இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய நிதிஷ் குமார், தமது கட்சி மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மூன்றாவது அணி அமைப்பதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் மாநிலக் கட்சிகளுடன் நடைபெற்று வருவதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய போதே, 17 ஆண்டுகளாக நிலவி வந்த பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.