நிதீஷ் போவது கஷ்டம்தான்.. ஆனா போனது போனதுதான்.. சொல்கிறார் சரத் யாதவ்
பாட்னா: நிதீஷ் குமார் ராஜினாமா என்பது கடினமான முடிவுதான். அதேசமயம், அதுவே இறுதியானது என்று கூறியுள்ளார் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ்.
இதன் மூலம் ஐக்கிய ஜனதாதளத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. நிதீஷ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம், அவரே நீடிக்க வேண்டும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் அதை மறு பரிசீலனை செய்வதாக நிதீஷ் குமாரும் சொல்லியுள்ள நிலையில் போனது போனதுதான் என்று சரத் யாதவ் சொலலியிருப்பதால் கட்சி பிளவுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சரத் யாதவ் கூறுகையில், நாட்டிந் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை நிதீஷ் எடுத்துள்ளார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டுதான் இது எடுக்கப்பட்டது. மேலும் நிதீஷ் குமாரின் நலனையும் கருத்தில் கொண்டதுதான் இந்த முடிவு. இது கடினமான முடிவுதான், ஆனால் சரியானது, இறுதியானது என்றார் யாதவ்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நிதீஷ் குமாரின் முடிவு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விலக்கிச் சொல்லப்பட்டு விட்டது. நமது இலக்கு டெல்லிதான், பீகார் அல்ல என்றார் அவர்.
கட்சி எம்.எல்.ஏக்கள் நிதீஷுக்கு ஆதரவாகப் பேசி வரும் நிலையில், யாதவ் இப்படிப் பேசியிருப்பது குழப்பத்தை அதிகரிப்பது போல உள்ளது.