வாக்கெடுப்பு கோரும் மஞ்சி .. பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு திடீர் எதிர்க்கட்சி அந்தஸ்து!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் திடீரென ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் 2 தொகுதிகளில் மட்டுமே ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றது. இதனால் நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து வி்ட்டு ஆதரவாளரான மஞ்சியை முதல்வராக்கினார்.
பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுவதால் மஞ்சியை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தாம் முதல்வர் பதவியில் அமர முயற்சித்தார் நிதிஷ். ஆனால் மஞ்சியோ நிதிஷுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.
இதனால் மஞ்சியும் அவரது ஆதரவாளர்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க முயற்சித்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன.
பீகார் ஆளுநர் திரிபாதியும் மஞ்சியை சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பிரதான எதிர்க் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்பதாக நேற்று அறிவித்த சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி, எதிர்க்கட்சி தலைவராக விஜய்சவுத்திரி இருப்பார் என்றும் கூறினார். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவரை பிரதான எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வாக்கெடுப்பில் மஞ்சியை பாரதிய ஜனதா ஆதரிக்க இருக்கிறது. ஆனாலும் மஞ்சி வெல்வது கடினமே என்று கூறப்படுகிறது.
233 இடங்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. மஞ்சிக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. 87 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா, 3 சுயேச்சைகள் ஆதரவு தந்தாலும் கூட பெரும்பான்மையை மஞ்சியால் நிரூபிக்க முடியாத நிலைதான் உள்ளது.
இதனால் மஞ்சி அரசு கவிழும் நிலையில் 128 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருக்கும் நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.