பாஜக மீது பாயும் நிதீஷ்குமார்.. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேற வாய்ப்பு?
பாட்னா: பாஜக பற்றி அதன் கூட்டணி கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் யாதவ் பேசிய சில கருத்துக்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ் குமார் முதல்வராக உள்ளார். முன்னதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரி ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியவர் நிதீஷ் குமார்.
கடந்த ஆண்டு, திடீரென கூட்டணியை மாற்றிக்கொண்டு பாஜகவுடன் தோளில் கை போட்டு ஆட்சியை தொடருகிறார்.
ஆளும் கூட்டணி தோல்வி
இந்த நிலையில் பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற இரு சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதி தேர்தல்களில் ஒரு சட்டசபை தொகுதியை மட்டும் பாஜக வெற்றி பெற்றது. அராரியா லோக்சபா தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி வென்றது. லாலு பிரசாத் சிறையில் உள்ளபோதிலும், அவர் கட்சி வெற்றி பெற்றது நிதீஷ்குமார் செய்த நம்பிக்கை துரோகத்தின் மீதான மக்களின் கோபம்தான் என்ற கருத்து நிலவுகிறது.
பாஜக மீது விமர்சனம்
இதையடுத்து மெல்ல மதசார்பின்மை பற்றி பேச்சை ஆரம்பித்துள்ளார் நிதீஷ்குமார். பாஜகவையும் விமர்சனம் செய்துள்ளார். நிதீஷ்குமார் இதுபற்றி கூறுகையில், மக்களே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் ஊழலை சகித்துக்கொள்ளவில்லை என்பதை போலவே சமூகத்தில் பிரிவினையை விதைப்பவர்களிடமும் சமரசம் கிடையாது. அன்பு, சகிப்பு தன்மையால் இந்த நாடு நடைபோட வேண்டும் என்ற கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன் என்றார்.
பாஜக கூட்டணி
ஏற்கனவே தெலுங்கு தேசம், சிவசேனா போன்ற முக்கிய கூட்டணி கட்சிகள் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டன. நிதீஷ்குமாரின் பேச்சும் பாஜக பற்றியதாக இருப்பதால் கூட்டணி நீடிக்குமா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானும், கூட்டணி கட்சியான பாஜகவுக்கு எதிராக சில கருத்துககளை தெரிவித்தார். சிறுபான்மையினர், தலித்துகள் பார்வையில் நல்ல கட்சியாக பாஜக மாற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ராம் விலாஸ் பாஸ்வான் யோசிக்காமல் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என்று நிதீஷ்குமார் கூறியுள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் பாஜகவில் கலக்கத்தை உருவாக்கியுள்ளன.
அமைச்சர் பேச்சு
அராரியா லோக்சபா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதாதளம் வெற்றி பெற்ற நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் சிங் பேசுகையில், அராரியா மாவட்டம், தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என்றார். இது குறிப்பிட்ட சமூக மக்களை மலினமாக கருதும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், நிதீஷ்குமார் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.