நிதீஷ் குமாருக்கு செருப்பைக் காட்டிய கும்பல்.. தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
பர்பிங்கா, பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் நிதீஷ் குமாருக்கு ஒரு கும்பல் செருப்புகளைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நவடா என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தின்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.
வர்சாலிகன்ச் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் நிதீஷ் குமார். ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் பிரதீப் குமாரை ஆதரித்து அவர் பேசினார். அப்போது ஒரு கும்பல் மோடி மோடி என்று கூச்சலிட்டபடியே கையில் செருப்புகளை உயர்த்திக் காட்டி கோஷமிட்டது.
ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார் நிதீஷ் குமார். தனது அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். அவர் பேச்சை முடிக்கும் வரையிலும் அந்தக் கும்பலும் செருப்பைக் கீழே போடாமல் தொடர்ந்து உயர்த்திப் பிடித்தபடி கோஷமிட்டபடியே இருந்தது.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.