ஊழலைப் பொறுத்துக்க முடியலை, அதான் விலகிட்டேன்.. நிதீஷ் குமார் அதிரடி
பாட்னா: என்னால் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ராஜினாமா என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
லாலு குடும்பத்துக்கும், நிதீஷுக்கும் இடையிலான மோதலின் கிளைமேக்ஸாக இன்று நிதீஷ் குமாரும், அவரது கட்சி அமைச்சர்களும் அதிரடியாக பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
வேறு வழியில்லை
இதன்பிறகு நடந்தே வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஊழலை பொறுத்துக் கொள்ளமாட்டேன். எனக்கு வேறு வழி தெரியாததால் ராஜினாமா செய்தேன்.
மாநில வளர்ச்சிக்காக உழைத்தேன்
பீகார் மாநில வளர்ச்சிக்காக முடிந்த அளவுக்கு உழைத்தேன். கூட்டணி உடையாமல் இருக்க கடைசி வரை போராடி பார்த்தேன். இதுதொடர்பாக ராகுல்காந்தியிடம் கூட பேசினேன்.
லாலு பிடிவாதம்
ஆனால் துணை முதல்வர் தேஜஸ்வி பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என ராஷ்டிர ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துவிட்டார்.
இந்த சூழலில் வேலை பார்க்க முடியாது
இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு நடுவே என்னால் பணியாற்ற முடியாது. ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றார் அவர்.