பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்- துணை முதல்வரானார் பாஜகவின் சுஷில்குமார் மோடி!
பாட்னா: பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில்குமார் மோடி பதவியேற்றார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வியின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் கோரினார்.
ஆனால் தேஜஸ்வி பதவி விலக மறுத்துவிட்டார். இந்த மோதலில் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை நேற்று அதிரடியாக ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாஜக ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 2 நாள்களுக்குள் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில்குமார் மோடியும் பதவியேற்றார்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்கு 58 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.