மரத்துக்கு ராக்கி கயிறு கட்டி 'ரக்ஸா பந்தன்' கொண்டாடிய நிதிஷ்குமார் !
பாட்னா: சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஸா பந்தன் பண்டிகை கொண்டியுள்ளார்.
பெண்கள்: தங்களது சகோதரர் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி அணிவிக்கும் தினமே ரக்ஷா பந்தன் விழாவாகும். இந்த பண்டிகை வியாழக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி பரிசு பெற்று மகிழ்ந்தனர். ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் பச்சைப்பசேல் என்று தோன்றும் வகையில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் கூறுகையில் ''பீகார் மாநிலம் சுற்றுச்சூழலில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்க, கடந்த 2011-ம் ஆண்டு 'ஹரியாலி மிஷன்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மரங்கள் வளர்ப்பதில் 9 விழுக்காட்டில் இருந்து 17 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன் மரம் வளர்ப்பதில் பீகார் மாநிலம் 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது அதை நாம் எட்டியிருப்போம் அல்லது நெருங்கியிருப்போம் என்று நம்புகிறேன்.
எனது தலைமையிலான அரசு மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் காரணமாக தனது கட்சியில் இணையும் ஒவ்வொரு தொண்டனும் ஒரு மரத்தை நட்டு அதை புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளேன்'' என்றார்.