மமதாவின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர்- பச்சைகொடி காட்டிய நிதிஷ்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜியின் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் செயல்படுவதற்கு ஐக்கிய ஜனதா தளம் பச்சை கொடி காட்டியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக பிரஷாந்த் கிஷோர் இருந்து வருகிறார். பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலிலும் இக்கூட்டணி நீடித்தது. ஆனால் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களை கேட்க, இதை நிராகரித்தது பாஜக. இதனால் மோடி அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை.
அத்துடன் பீகார் தவிர பிற மாநிலங்களில் ஐக்கிய ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மமதாவின் தேர்தல் கள ஆலோசகரானார் பிரஷாந்த் கிஷோர்.
மாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு!
பாஜகவை வீழ்த்த மமதாவுடன் பிரஷாந்த் கிஷோர் கை கோர்த்தது பாஜகவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து பிரஷாந்த் கிஷோர் விளக்கம் அளித்தார்.
இதன் பின்னர், பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம், மமதாவுடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என ஐக்கிய ஜனதா தளம் வெளிப்படையாகவே அறிவித்தது. இருப்பினும் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்றே கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.