சிபிஐ ரெய்டு விவகாரம்...லாலு மகன் தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிதீஷ் நிர்பந்தம்?
லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியதால், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக துணை முதல்வர் பதவியிலிருந்து தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிர்பந்திப்பாரா என்ற கேள்வி எழுந்
பாட்னா: சிபிஐ ரெய்டுக்குள்ளான தேஜஸ்வியை துணை முதல்வர் பதவியிலிருந்து விலக முதல்வர் நிதீஷ்குமார் நிர்பந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த 2004-2009- ஆம் ஆண்டு வரை லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் ஹோட்டல்களுக்கு டெண்டர்கள் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகனும், பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
பாஜக கோரிக்கை
சிபிஐ ரெய்டுக்குள்ளான தேஜஸ்வியை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
பாட்னா திரும்பினார் நிதீஷ்
ரெய்டு நடந்த சமயத்தில் ராஜகிரியில் இருந்த முதல்வர் நிதீஷ்குமார் 3 நாள்கள் கழித்து தலைநகர் பாட்னா திரும்பியுள்ளார். வந்ததும் வராததுமாக சிபிஐ ரெய்டு குறித்து அரசியல் நிலவரம் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையிலும் முதல்வர் தன் நிலைப்பாட்டை இதுவரை விளக்கம்வில்லை.
நிகழ்ச்சி ரத்து
பாட்னாவில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பொதுநிகழ்ச்சியிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் நிதீஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் சிபிஐ குறித்த கேள்விகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த நிதீஷ், அந்த கூட்டங்களை உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்துவிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தனித்தனிக் கூட்டங்கள்
பீகார் மகா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிதீஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), லாலு பிரசாத் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) ஆகியோர் தங்கள் கட்சியின் எம்எல்ஏ-க்களை தனித்தனியாக கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். லாலு பிரசாத் இன்றும், நிதீஷ் குமார் நாளையும் எம்எல்ஏ-க்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நிதீஷ் நிலைப்பாடு
ஊழலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கொள்கையுடைய நிதீஷ்குமார் தனது கூட்டணி கட்சியினரின் வீட்டில் நடந்த ரெய்டுக்கு எந்தவிதமான நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரும் உற்று நோக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக தேஜஸ்வியை ராஜினாமா செய்ய நிதீஷ் நிர்பந்திப்பாரா என்ற யூகங்களும் எழுகின்றன.
எதற்கு ராஜினாமா
அதேவேளை, தார்மீக அடிப்படையில் தேஜஸ்வியாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே நிதீஷ் கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது. எது என்ன நடந்தாலும் தேஜஸ்வி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கருதுகிறது. மேலும் இந்த சிபிஐ சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்று லாலு ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
முன்னுதாரணம்
ஊழல் புகாரில் சிக்கியுள்ள தேஜஸ்வியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஊழலை ஒழிப்பதில் நிதீஷ் முன்னுதாரணமாக இருப்பாரா அல்லது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று கண்டும் காணாமல் இருந்துவிடுவாரா என்பது நாளை அவர் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.