ஆண்மை சோதனை வழக்கு: ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்
டெல்லி: நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது தொடர்பாக இன்று ராம்நகர் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை வரும் 23ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
பெங்களூரிலுள்ள விக்டோரியா, அரசு மருத்துவமனையில், இந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியிருந்தது. இதனிடையே தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கோரி, நித்யானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணை நடைபெறும் ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டது. இதையேற்று ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நித்யானந்தா ஆஜரானார். ஆண்மை பரிசோதனை நடத்தும் உத்தரவு வந்த பிறகு தலைமறைவாகியிருந்த நித்யானந்தா தற்போதுதான் ஆஜராகுவதால், அவர் மீது யாரேனும் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தால் கோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நித்யானந்தாவை கைது செய்ய நீதிபதி உத்தரவிடக்கூடும் என்ற எதிர்பார்பார்ப்பால், வழக்கை விசாரித்து வரும் சிஐடி போலீசாரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணையை வரும் 23ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது கோர்ட். எனவே அதுவரை நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்படமாட்டாது.