தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்
Recommended Video
காந்திநகர்: தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு அருகே உள்ள பிடதியை தலைமையிடமாக கொண்டு நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கிளைகளை அவர் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹீராபூரில் ஒரு தனியார் பள்ளியில் நித்யானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு 4 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
பெங்களூர் ஆசிரமம்
இதுதொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் புகாரின் பேரில் ஹீராபூர் ஆசிரமத்தில் இருந்த சர்மாவின் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். குருகுல கல்வி என்ற பெயரில் நித்யானந்தா ஆசிரமத்தில் சேரும் குழந்தைகளை நள்ளிரவில் எழுப்பி மேக்கப் போட வைத்து நித்யானந்தாவுடன் விளம்பரப்படங்களில் நடிக்க வைப்பதும் தெரியவந்தது.
தொழிலதிபர்கள்
மேலும் பணக்காரர்கள், தொழிலதிபர்களை குறிவைத்து இந்த சிறுமிகளை அனுப்பி நித்யானந்தா குறித்து புகழை பரப்பி அவர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யவும் கட்டாயப்படுத்துவது தெரியவந்தது.
மேலும் நன்கொடை என்றால் 100, 1000 இல்லை.
அதிகபட்சம் 8 கோடி
குறைந்தது 3 லட்சம் ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டும். பணமாக இல்லாவிட்டால் நிலத்தையாவது எழுதி வாங்கி வரவேண்டுமாம். இப்படித்தான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
புகார்கள்
இதுதொடர்பாக 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தாவை கைது செய்யவும் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த நிலையில் மேலும் சில புகார்கள் இந்த ஆசிரமம் குறித்து எழுந்த வண்ணம் உள்ளன.
பரபரப்பு
இதனால் நித்யானந்தா ஆசிரமத்தை மூட மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.