மக்கள் உடல் மீது அவர்களுக்கு முழு உரிமை கிடையாது.. ஆதார் வழக்கில் மத்திய அரசு தடாலடி வாதம்
டெல்லி: மக்களுக்கு அவர்கள் உடல் மீது முழு உரிமை கிடையாது என்று ஆதார் அடையாள அட்டை வழக்கில் மத்திய அரசு வாதம் முன் வைத்துள்ளது.
பான்கார்டு, வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற வாதத்தின்போது, நீதிபதி சிக்ரி முன்னிலையில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதம் முன்வைத்தார். அவர் கூறுகையில், ஆதார் அடையாள அட்டைக்காக கைரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிப்பது என்பது தனி நபர் உரிமையில் தலையிடுவதாகாது, நாட்டு நலனுக்கு அது அவசியம் என்றார்.
அடையாளம் வேண்டும்
முகுல் ரோஹத்கியின் வாதத்தில் இருந்து முக்கிய அம்சங்கள் இதோ: ஆதார் அட்டையின் அவசியம், இந்த நாட்டு குடிமக்களுக்கு அடையாளம் வேண்டும் என்பதுதான். அனைவரையும் குற்றவாளியாக பார்ப்பது கிடையாது.
நாடாளுமன்ற அதிகாரம்
தனி நபர் உரிமை குறித்த நீதிமன்ற உத்தரவுகள், ஆதார் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் முன்பு வெளியானவை. எனவே அந்த உத்தரவுகள் இதற்கு பொருந்தாது. நாடாளுமன்றத்தை கோர்ட் கட்டுப்படுத்த முடியாது. அரசை மட்டுமே கோர்ட் கட்டுப்படுத்த முடியும். எனவே நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செயல்பட கூடாது.
தற்கொலை செய்ய முடியாதே
மனிதனின் உடல் மீது மனிதனுக்கே முழு உரிமை கிடையாது. அப்படி உரிமை கொடுத்தால் எனது உடல்தானே என நினைத்து ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முடியும். ஆனால் அந்த உரிமை கிடையாது என்பதால்தான், தற்கொலை செய்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.
விபசாரம் செய்ய முடியாது
தனது உறுப்புகளை விற்பனை செய்வதற்கும் தனி நபர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. தனது உடல்தானே என நினைத்து, கஞ்சா புகைப்பதற்கும், விபசாரம் செய்வதற்கும் கூட முடியாது. எங்களை சுதந்திரமாக விடுங்கள் என்றுதான் அவர்கள் கூறுவார்கள், அதற்காக நீதிமன்றம் அதை அனுமதிக்க கூடாது.
அமெரிக்காவில் இப்படி
அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில், கூறெடுப்பு முறையில், அவ்வப்போது மாணாக்கர்களிடம் போதை மருந்து பரிசோதனை நடத்த அனுமதியுள்ளது. (அதுதொடர்பான அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வாசித்தார்)
தேச நலனே பெரிது
இந்தியாவை பொறுத்தளவில் கை ரேகை பல்வேறு விஷயங்களுக்காக எடுக்கப்படுகிறது. தனி மனித உரிமை என்பது, தேசத்தின் நலனை விடவும் பெரிது கிடையாது. எலக்ட்ரானிக் ஐடிக்கள் என்பது உலகமெங்கும் இப்போது சாதாரண விஷயம்.
பெஸ்ட் ஐடி கார்டு
ஆதார் அடையாள அட்டை அனைத்து வசதிகளையும் அடக்கியது, எனவே இந்த அடையாள அட்டை முறை அவசியம். அனைத்து அடையாள அட்டைகளைவிடவும் ஆதார் மேம்பட்டது. பணக்காரர் வைத்திருப்பதை போன்ற அதே அடையாள அட்டையைத்தான், ஏழையும் வைத்திருக்க முடியும். அதில் கூட ஆதார் ஏற்றத்தாழ்வு காட்டாது.