தேமுதிகவுடன் கூட்டணியெல்லாம் இல்லை- திருநாவுக்கரசர் விளக்கம் #thirunavukkarasar
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நட்பு ரீதியில்தான் சந்தித்தேன். பொதுப் பிரச்சினைகளில் இணைந்து செய்லபடுவோம் என்றுதான் கூறியிருந்தேன். அதற்கு கூட்டணி என்று அர்த்தம் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ். திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவர் இன்று சந்தித்துப் பேசினார். சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க ராகுல் சென்னை வந்திருந்தார். அப்போது தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் காங்கிரஸ் துணையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
தமிழக அரசை நிலை குலையச் செய்ய பாஜக முயற்சிப்பதாகவும், அப்படி நடந்தால் அதை காங்கிரஸ் எதிர்த்துப் போராடும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் திருநாவுக்கரசர் டெல்லி வந்துள்ளார். அங்கு இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது நேற்று சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்தது குறித்தும், தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு திருநாவுக்கரசர் பதிலளிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். நடிகராக இருந்தபோதே நண்பர். அந்த வகையில் நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.
தமிழக நலன் கருதி, தமிழகத்தின் பிரச்சினைகளில், தமிழ் மக்களின் நலன் கருதி நடைபெறும் போராட்டங்களில் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றுதான் நான் கூறியிருந்தேன். நான் கூறியதற்கு அதுதான் அர்த்தம். கூட்டணி என்று அர்த்தம் அல்ல. தேமுதிக மட்டுமல்ல, எந்தத் தலைவரிடமும் நான் கூட்டணி குறித்துப் பேசவில்லை.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இப்போது இல்லை. எனவே கூட்டணி குறித்து யாருடனும் பேச வேண்டிய தேவை இப்போது இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேசிக் கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கிரோம். தொடர்ந்து பேசுவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன் என்றார் திருநாவுக்கரசர்.