காங்கிரசுடன் கூட்டணி இல்லை- நிதிஷ்குமார், காங்கிரசுடன் தான் கூட்டணி- பாஸ்வான்
பாட்னா: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டனி இல்லை என்று பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை லோக்சபா தேர்தல் பிரசார குழு தலைவராக, பிரதமர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்தியதால் இரு கட்சிகளிடையேயான கூட்டணி முறிந்தது.
இதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கக் கூடும் என்று கூறப்பட்டது. இதனால் லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டது.
காங்கிரஸுடன் பேச்சு இல்லை
ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதை நிராகரித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த செய்திகள் ஆதாரமற்றவை. தற்போதைய நிலையில் பாபுலால் மராண்டியின் ஜேவிம்(பி) கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனாலும் அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு எதுவும் நடைபெறவில்லை என்றார்.
பாஸ்வான் பற்றி..
மேலும் லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் பற்றி கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், அவர் ஒரு ஜென்டில்மேன். 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஸ்வானை மாநில முதல்வராக்க விரும்பினோம். ஆனால் அது நடைபெறவில்லை என்றார்.
பாஸ்வான் பதில்
நிதிஷ்குமாரின் இந்த கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள பாஸ்வான், எங்களிடையே கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடும் இல்லை என்றார்.
காங்கிரஸுடன் தான் கூட்டணி
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே லோக்ஜனசக்தி கூட்டணி அமைக்கும் என்றும் பாஸ்வான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மிரட்டல்
இதனிடையே நிதிஷ்குமாரின் கூட்டணி தொடர்பான விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, கூட்டணி தொடர்பாக எந்த ஒரு யோசனையுமே நாங்கள் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளது. நிதிஷ்குமார் இப்படி விமர்சித்துக் கொண்டிருந்தால் அவரது அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து யோசிக்க வேண்டியதும் இருக்கும் என்றும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.