ஜல்லிக்கட்டு பற்றி அமைச்சரவையில் விவாதிக்கவேயில்லை.. கைவிரித்த ஜவடேக்கர்
டெல்லி: டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த எப்படியும் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள் மீண்டும், மீண்டும் கூறிவருகிறார்கள். இதை எதிர்பார்த்து பல்வேறு ஊர்களிலும் போட்டி அமைப்பாளர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். பலர் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் ஏதேனும் அவசர சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என கூறிவிட்டார் ஜவடேக்கர்.