ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதிக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?- சிபிஐ மீண்டும் எதிர்ப்பு!!
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தயாநிதி, கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கை எந்த நீதிமன்றத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட உள்ளதால் வழக்கு விசாரணையை தேடி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது கடந்த 1ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் தர அமலாக்கத்துறை தரப்பில் மிகக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது தயாநிதி, கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இன்றைய விசாரணையின் போதும் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில் முன்ஜாமீனை எதிர்ப்பதற்கான வாதங்களை வரும் 29ம் தேதி மனுவாக தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, அடிக்கடி கூடுதல் அவகாசம் கேட்பதை தவிர்த்து விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்புக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாறன் சகோதரர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ, அமலாக்கப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே வழக்கை எந்த நீதிமன்றத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட உள்ளதால் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஓ.பி. சைனி ஒத்திவைத்தார்.