2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அரசு பணி இல்லை என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அஸ்ஸாம் அரசு 2017-ம் ஆண்டு அம்மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது அத்தீர்மானம்.
20 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. அரசியல் சாணக்கியருக்கு இந்த நிலையா?.. சறுக்கும் சரத் பவார்!
அஸ்ஸாம் அமைச்சரவை கூட்டம்
தற்போது இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகள்
இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனடிப்படையில் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் நிலம் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.
இலவச நிலத்துக்கு கட்டுப்பாடு
மேலும் அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத்துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..
அத்துடன் 2021 ஜனவரி 1-ந் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை கொடுத்துள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களும் இதனை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என அஸ்ஸாம் அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு விவகாரம் அஸ்ஸாமில் பெரும் சர்ச்சையானது.
பல லட்சம் பேர் அவதி
தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடவடிக்கை மூலம் பல லட்சம் பேர் நாடற்றவர்களாக்கப்பட்டுவிட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதேநேரத்தில் மத்திய அரசோ, தேசியகுடிமக்கள் பதிவேடு நடைமுறை என்பது உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்கில் டென்சன்
குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத எவரும் நாடு கடத்தப்படமாட்டார்கள். இதை அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. இருப்பினும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் அஸ்ஸாம் உட்பட நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருவித அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்தது.
பெண்கள் கல்வி
இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இனி இல்லை என்பது அம்மாநிலத்தில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. 2017-ம் ஆண்டு அஸ்ஸாம் சட்டசபை தீர்மானத்தின்படி பெண்களுக்கு பல்கலைக் கழக படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.